மதுரையில் கோவிட் மரணங்களில் மூன்றிலொரு பங்கு மரணத்தை மறைக்கிறதா தமிழக அரசு? – மதுரை எம்.பி.வெங்கடேசன்

மதுரை, ஜூலை, 19- மதுரை மாவட்டத்தில் ஜூலை 15ஆம் தேதி வரை நிகழ்ந்துள்ள கொரோனா மரணங்களின்  எண்ணிக்கை 129 என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால், மதுரை தத்தனேரி மயானத்தில் ஜூலை 15ஆம்  தேதிவரை கொரோனா நோயால் இறந்தவர்கள் 167 பேர் தகனம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இறந்தவர்களில்  பிறமாவட்டத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 46 பேர். மதுரை கீரைத்துறை அஞ்சலி மின்மயானத்தில் ஜூலை15ஆம்
தேதி வரை கொரோனா நோயால் இறந்தவர்கள் 57 பேர் தகனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 13 பேர் பிற  மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மதுரை மாவட்டத்தில் இஸ்லாமியர்களின் அடக்கஸ்தலமான மையவாடியில் கொரோனா  நோயால் இறந்தவர்கள் 39 பேர் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் பிறமாவட்டத்தை சேர்ந்தவர்கள் 8 பேர். இஸ்லாமிய அமைப்பு களால் பிற இடங்களில் நல்லடக்கம் செய்யப்பட்ட இஸ்லாமியரல்லாதவர்களின் எண்ணிக்கை 2. கிருஷ்துவ கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7. மொத்தத்தில் பிற  மாவட்டங்களைச் சேர்ந்த 67 பேர்நீங்கலாக, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 205 பேர்கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டு இறந்ததாக மயானம், அடக்கஸ்தலம், கல்லறைத்தோட்டம் ஆகியவற்றின் விபரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் தமிழக அரசோ 129 பேர்தான் மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் இறந்ததாக அறிவித்துள்ளது.
மூன்றில் ஒரு பங்கு மரணத்தை (76 பேர்) மறைக்கிறதா தமிழக அரசு? உண்மை நிலையென்ன என்பதை உடனடியாக  மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மதுரை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பி உள்ளார்.