தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கற்றல் உபகரணங்கள் வழங்கும் வைபவத்தில் ரொறன்ரோ மனித நேயக்குரல் அமைப்பின் பிரதிநிதிகள்

யாழ்ப்பாணத்தில் முன்னாள் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் அவர்கள்; தலைமையில் இயங்கிவரும் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கற்றல் உபகரணங்கள் வழங்கும் வைபவத்தில் ரொறன்ரோ மனித நேயக்குரல் அமைப்பின் தலைவர் ஆர். என். லோகேந்திரலிங்கம் மற்றும் அங்கத்தவர் சங்கர் சிவநாதன் மற்றும் திருமதி பத்மா லோகேந்திரலிங்கம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். அன்றைய தினம் பசுமை அறிவொளி நிகழ்ச்சித்திட்டம் என்னும் அற்புதமான மாணவர் நலன் சார்ந்த திட்டத்தை தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் அறிமுகம் செய்திருந்தனர்.

மாணவர்களுக்குச் சூழல் அறிவைப் புகட்டிச் சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் சூழற் பாதுகாப்பில் அவர்களைப் பங்குபற்றுநர்களாக்கும் நோக்கோடு தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் முன்னெடுத்துள்ள இத்திட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (06.03.2022) யாழ்ப்பாணம் நல்லூரில் இயங்கிவரும் ‘இளங்கலைஞர் மன்ற கலைக் கூடத்தில் இடம்பெற்றது.. தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் சூழல் பாதுகாப்பு அணியின் துணைச் செயலாளர் த. யுகேஸ் தலைமையில் நடைபெற்ற இத்திட்டத் தொடக்க நிகழ்ச்சியில் கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும், ரொறன்ரோவின் மனிதநேயக்குரல் அமைப்பின் தலைவருமான என்.ஆர்.லோகேந்திரலிங்கம் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டிருந்தார்.

இந்நிகழ்ச்சியில் வளவாளர்களாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற்கல்லூரியின் விரிவுரையாளர் பா.பாலகணேசன், கரவெட்டி விக்னேஸ்வரக் கல்லூரியின் ஓய்வுநிலை அதிபர் மு. கனகலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கியிருந்தார்கள். தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் திட்டம் தொடர்பான விளக்கவுரையை ஆற்றியிருந்தார். அதிக எண்ணிக்கையான மாணவர்களும் பெற்றோர்களும் கலந்துகொண்ட இத்திட்டத் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் ரொறன்ரோவின் மனிதநேயக் குரலின் அனுசரணையில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

மேற்படி வைபவத்தில் பல மக்கள் நலன் சார்ந்த அன்பளிப்புக்களை ரொறன்ரோ மனித நேயக்குரல் அமைப்பு வழங்கியது மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக 3 மாணவர்களுக்குரிய நிதி அன்பளிப்பை வழங்கியது. அத்துடன் திரு பொ. ஐங்கரநேசன். மன்னார் பிராந்திய செய்தியாளர் லம்பேர்ட் மற்றும் யாழ்ப்பாணத்தில் தயாரான’ புத்தி கெட்ட மனிதர் எல்லாம்’ திரைப்படத்தின் தயாரிப்பு குழுவினர் ஆகியோர்க்கு கனடிய பாராளுமன்றம் சார்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு வழங்கிய சான்றிதழ்களை திரு ஆர். என். லோகேந்திரலிங்கம் வழங்கி கௌரவித்தார். அன்றைய தினம் வழங்கப்பெற்ற அன்பளிப்புக்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்க ஆகியவற்றுக்கான நிதியை வழங்கிய கனடா வாழ் சட்டத்தரணி மெலனி டேவிற். விழித்தெழு பெண்ணே’ அமைப்பின் தலைவி சசிகலா நரேன். வீடு விற்பனை முகவரும் சமூக சேவையாளருமான பாஸ்கரன் சின்னத்துரை ‘ரூபம்’ வானொலி அதிபர் சங்கரர சிவநாதன் திருவாளர்கள் நிமால் விநாயகமூர்த்தி. சங்கர் நல்லதம்பி வீடு விற்பனை முகவர் கைலன் தில்லைநாதன்-திருமதி சபா குணசிங்கம், திருமதி பாஸ்கரன் உட்பட பல அன்பர்கள் வழங்கியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது

– செய்தி- சத்தியன்- கணேஸ்