பகுதிநேர ஆசிரியர்களுக்கு கொடுத்த வாக்குறுதிபடி, பணிநிரந்தரம் செய்ய வேண்டும்: – செந்தில்குமார்

பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் அறிக்கை :
 
திமுக தேர்தல் அறிக்கையில் 181-வது வாக்குறுதியாக பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வோம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அப்போது சொன்னார். விடியல் தர போறாரு ஸ்டாலின் என்ற திமுக நடத்திய உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியிலும் தருமபுரி, கன்னியாகுமரி, மயிலாடுதுறையில் பகுதிநேர ஆசிரியர்களிடம் கலந்துரையாடிய ஸ்டாலின், அப்போது திமுக ஆட்சிக்கு வந்தால் உடனே பணிநிரந்தரம் செய்வேன் என்றார். திமுக ஆட்சிக்கு வந்த உடனே செய்வேன், 100 நாளில் செய்வேன் என அப்போது தேர்தல் பரப்புரையில் இப்போதைய முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அடிக்கடி சொன்னார்.
ஆனால் இப்போது திமுக ஆட்சிக்கு வந்து 27 மாதங்கள் ஆகிறது. முன்பு தான் சொன்னதை இப்போது நிறைவேற்றும் இடத்தில் முதல்வராக இருக்கும்போது, பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்யாமல் காலம்தாழ்த்தி வருவது எங்களை பாதிக்கிறது. இன்னும் 33 மாதம் மட்டுமே இந்த சட்டசபையின் ஆட்சி காலம் உள்ளது.
இதில் கடைசி 6 மாதம் தேர்தல் நடவடிக்கைக்கு வந்து விடும். இதெல்லாம் கணக்கிட்டு பார்த்தால் இனியும் தாமதம் செய்வது பகுதிநேர ஆசிரியர்களை மேலும் பாதிக்கும்.
 
முதல்வர் கவனத்திற்கு சட்டசபையில் அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் கொண்டு சென்றனர். அனைத்து அரசியல் கட்சிகளும் தொடர்ந்து முதல்வருக்கு வலியுறுத்தி வருகிறது.
பகுதிநேர ஆசிரியர்கள் தரப்பிலும் கோரிக்கை மனு, ஈமெயில், ட்விட்டர், பேஸ்புக், தொடர் போராட்டங்கள் என எல்லா வகையிலும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. திமுகவின் தேர்தல் வாக்குறுதியை கோரிக்கையாக வைக்கும்போது அதை முதல்வர் தான் நினைத்து பார்த்து செயல்படுத்த வேண்டும். 12 ஆண்டாக தற்காலிகப்பணி, ரூபாய் 10ஆயிரம் குறைந்த தொகுப்பூதியம் என்பதை கைவிட்டு, காலமுறை சம்பளம் வழங்கினால் 12ஆயிரம் குடும்பங்கள் பயன் பெறும். இதை அரசு கொள்கை முடிவாக அறிவிக்கலாம். சிறப்பு சட்டம் கொண்டு வரலாம். முதல்வர் கையில் தான் இருக்கிறது. முதல்வர் மனசு வைக்க வேண்டும்.
 
இங்கனம் :
S.செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்,
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு,