புதிய தேசிய கடல் மீன்வள மசோதா தொடர்பாக; ஒன்றிய மீன்வளத்துறை அமைச்சருடன்; நவாஸ்கனி எம்.பி., சந்திப்பு!

புதுடெல்லி, ஜூலை. 19: ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள தேசிய கடல் மீன் வள மசோதா தமிழ்நாட்டின் மீனவர்களை அச்சுறுத்தும் வகையிலும் தமிழ்நாடு மீனவர்கள் எதிர்க்கும் வகையிலும் அமைந்துள்ளது.

இது தொடர்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவரும், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான கே நவாஸ்கனி, ஒன்றிய மீன்வளத்துறை அமைச்சர் பர்சோத்தம் ரூபாலாவை சந்தித்து மசோதாவை கொண்டு வருவதற்கு முன் முழுமையான மற்றும் முறையான மீனவர்களின் கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்தி, தமிழ்நாடு மீனவர்களின் அச்சங்களை நீக்கி, மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் அம்சங்களை நீக்கி அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், அவரது கோரிக்கையில்
குறிப்பிட்டிருந்ததாவது. இந்த சட்டத்தின்படி மீனவர்கள் 5 கடல் மைல் தாண்டி 12 கடல் மைல் தொலைவிற்குள் தான் மீன் பிடிக்க வேண்டும் என்றும், இதில் மீனவர் பதிவுகள், உரிமம் வழங்குதல் போன்றவை மீன்வளத்துறையிடமிருந்து பறித்து கடலோர காவல்படை கட்டுப்பாட்டில் கொண்டுவர படுவதாகவும் மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்த சட்டத்தை மீறுவோருக்கு ரூபாய் 6 லட்சம் முதல் 9 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் விதி மீறலில் ஈடுபடும் மீனவர்களின் படகுகள் வலைகள் பறிமுதல் செய்வதுடன் மீன்பிடித் தொழிலில் ஈடுபட வாழ்நாள் தடை விதிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக மீனவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்த சட்டத்தின் மூலம் 12 கடல் மைலுக்கு அப்பால் உள்ள ஆழ்கடலில் மீன் பிடிக்க வேண்டும் என்றால் மத்திய அரசின் சிறப்பு அனுமதி பெற்று தான் செல்ல வேண்டும் என்றும் அத்துடன் மீன் பிடிக்கின்ற ஒவ்வொரு படகும் மீன் பிடிப்புக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மீனவர்களை வெகுவாக பாதிக்கும் என தமிழ்நாடு மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே ஜிஎஸ்டி வரி விதிப்பு போன்றவைகளால் பொருளாதார நெருக்கடியில் திணறிக் கொண்டிருக்கும் மீனவர்களை இச்சட்டம் கூடுதலாக பாதிக்கும் என்றும் தண்டனை அபராதம் கைது பறிமுதல் போன்ற நடவடிக்கைகளால் மீனவர்கள் அச்சம் கொள்வதாகவும் தொடர்ந்து கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே இந்த மசோதாவை கொண்டு வருவதற்கு முன் முழுமையான மற்றும் முறையான மீனவர்களின் கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்தி, தமிழ்நாடு மீனவர்களின் அச்சங்களை நீக்கி, மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் அம்சங்களை நீக்கி அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு, நவாஸ்கனி எம்பி, ஒன்றிய மீன்வளத்துறை அமைச்சர் பர்சோத்தம் ரூபாலாவிடம்
வலியுறுத்தியுள்ளார்.