நாமக்கல் மாவட்டம் மாணிக்கம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் எலச்சிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.மு.ஆசியா மரியம்.இ.ஆ.ப. அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு

நாமக்கல் மாவட்டம் மாணிக்கம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் எலச்சிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.மு.ஆசியாமரியம்.இ.ஆ.ப. அவர்கள் 12.09.2019 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது சித்த மருத்துவ பிரிவு மருந்து வழங்கும் பகுதி புறநோயாளிகள் சிகிச்சை பெறும் பகுதி கர்ப்பிணித் தாய்மார்களை ஸ்கேன் செய்யும் பகுதிகளை பார்வையிட்டார். அப்போது பொதுமக்களிடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை வழங்குவது குறித்து விசாரித்தார். மருந்துகளின் இருப்பினையும் இருப்பு பதிவேட்டினையும் பார்வையிட்டு தேவையான அனைத்து மருந்துகளும் இருப்பு உள்ளதா என்று மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

மாணிக்கம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்வதை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டார். அப்போது கர்ப்பிணித்தாய்மார்களிடம் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளபடி சத்தான உணவு பழக்கங்களை மேற் கொள்ளுமாறும் தகுந்த இடைவேளியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருகை தந்து மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு இருப்பதாலும் உங்கள் வசிப்பிடத்திற்கு அருகிலேயே அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைந்துள்ளதாலும் குறித்த நேரத்தில் கர்ப்பிணித்தாய்மார்களை அழைத்து வந்து பாதுகாப்பாக பிரசவங்களை மேற்கொள்ளுமாறு கர்ப்பிணித்தாய்மார்களுடன் வந்திருந்த உறவினர்களிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கேட்டுக் கொண்டார்.

ஆண் பெண் பாலின விகிதம் சமமாக இருக்க பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை கண்காணிக்குமாறு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அறிவுறுத்தினார். கர்ப்பிணித்தாய்மார்களின் விவரங்களை சுகாதாரத் துறையின் இணையதளத்தில் பதிவு செய்து கர்ப்பிணித்தாய்மார்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் உரிய அறிவுரைகளை வழங்கி தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். மேலும் காய்ச்சலுடன் நோயாளிகள் வந்தால் உரிய மருத்துவ பரிசோதனைகளை செய்து ஆலோசனைகள் வழங்குமாறு கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வின் போது அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.