*இரண்டாம் முறை வெளிப்பட்ட* *கல்வியமைச்சரின் தாய்மனம்

நல்லுலகில் பட்டினியை இசுலாம் மக்கள்

     நன்கறியும் நோக்கத்தில் *ரமலான் மாதத்*

தொல்மரபு நோன்புதனைக் கடைப்பி டிக்கும்

        தூய்மைமிகு கடமைதனை மேற்கொள் கின்றார் !

உள்ளத்தால் உடல்,செய்கை, எண்ணத் தாலும்

       ஒழுங்குடனே முப்பதுநாள் நோன்பி ருந்து

அல்லில்வரும் *ஷவ்வாலின்* பிறையைக் கண்ட

       அப்புறமே நோன்பினையே துறப்பார் முஸ்லீம் !

அவ்வகையில் நோன்புநாள் முழுதும் பள்ளி

       அனைத்தினிலும் சிற்றுண்டிச் சாலை மூடல்

செவ்வையுடன் இதுவரைகாண் வழக்க மாகும் !

       சிற்றுண்டிச் சாலைகளும் மூடப் பட்ட

அவ்வளவு நாள்களிலும் இசுலாம் அல்லா

       அத்தனைமா ணவர்களுமே உணவை உண்ண

எவ்வளவோ தொல்லைகளை கண்டி ருப்பார்

       இதைக் *கல்வி யமைச்சர்தாய்  மனமும்* காணும் !

அதனால்தான் *இவ்வாண்டு நோன்பு* நாளில்

      அனைத்துமுள்ள பள்ளிச்சிற் றுண்டிச் சாலை

முதன்முதலாய்த் திறந்திருக்க வேண்டும் என்று

       முடிவெடுத்த *ஃபட்லீனா சிடேக்* அம்மா,

இதற்குமுன் *நால்வருக்குக்* கல்வி தன்னை

      ஈத்துவந்த *தாய்மனத்தை* மீண்டும் மற்ற

மதத்தவரும் உணவுண்ணச் செய்தே இன்று

       மலேசியர்க்கும் காட்டியுள்ளார் ; அவர்க்கு நன்றி !

சிற்றுண்டிச் சாலையிலே உணவை உண்ணும்

      சிலநிமிடத் திற்குள்ளே *முசுலீம் பார்க்கச்*

*சிற்றுண்டி உண்பதையே இசுலாம் அல்லார்*

      திண்ணமுடன் தவிர்த்திடணும் ; *நோன்பு நோற்கும்*

*உற்றவர்க்குச் சிறுதுயரும் வாரா வண்ணம்*

       மற்றமதம் சார்ந்தவர்கள் செய்தல் வேண்டும் !

கற்பவரும் கற்பித்துத் தருவோர் தாமும்

    கடைப்பிடிக்க வேண்டுமிதைக் கண்டிப் பாக !

                                                                    *பாதாசன்*

*அருஞ்சொல் விளக்கம் -:*

  அல்லில்தான்இரவில்தான்