செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியால் ஒருவரின் முகம், பேச்சு மற்றும் தோற்றத்தை கணப்பொழுதில் அச்சு அசலாக உருவாக்கிவிடும் இக்காலகட்டத்தில், ஒருவரின் தனிப்பட்ட அடையாளத்தையும் அவரது சம்மதத்தையும் பாதுகாப்பது முதன்மையான தேவையாக உருவெடுத்துள்ளது. செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் புகைப்படங்கள், போலியாகத் தொகுக்கப்பட்ட காணொளிகள் மூலம் தனது அனுமதி இல்லாமல் அடையாளம் பயன்படுத்தப்படுவதற்கு எதிராக நடிகையும் பாடகியுமான ஸ்ருதி ஹாசன் சட்டரீதியான போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.
இவ்வழக்கை விசாரித்த பம்பாய் உயர் நீதிமன்றம், ஸ்ருதி ஹாசனுக்கு சாதகமாக இடைக்காலப் பாதுகாப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ள குறிப்பிட்ட போலிப் பதிவுகளை உடனடியாக அகற்றுமாறு ஆணையிட்டுள்ள நீதிமன்றம், இவை தொடர்ந்து இணையத்தில் உலாவுவது அவரது நற்பெயருக்கும், சமூக மதிப்பிற்கும், வர்த்தக ரீதியான வாய்ப்புகளுக்கும் மீட்க முடியாத இழப்பை ஏற்படுத்தும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த விவகாரம் ஸ்ருதி ஹாசன் என்ற தனிநபரோடு முடிந்துபோவதல்ல. பல காலமாகவே நடிகைகள் மற்றும் பிரபலமான பெண்களின் புகைப்படங்களை உருமாற்றுவதும், அவர்களின் பெயரில் போலி விளம்பரங்களை வெளியிடுவதும் சமூக ஊடகங்களில் தொடர்கதையாக உள்ளது. தற்போது ‘ஜெனரேட்டிவ் ஏ ஐ’ தொழில்நுட்பத்தின் வருகையால், இதுபோன்ற போலி உள்ளடக்கங்களை மிக எளிதாகவும் வேகமாகவும் உருவாக்க முடிகிறது; அதேவேளையில் எது உண்மை, எது போலி என்று கண்டறிவது சாமானிய மக்களுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.
ஒருவரின் ஒப்புதல் இன்றி அவரது முகம், குரல் அல்லது தோற்றத்தைப் பயன்படுத்துவது முற்றிலும் தவறானது. ஒருவர் திரைத் துறையிலோ அல்லது பொதுவெளியிலோ பிரபலமாக இருக்கிறார் என்பதற்காக, அவரது அனுமதியின்றி அவரது தோற்றத்தை டிஜிட்டல் முறையில் மாற்றவோ, தயாரிப்புகளுக்குப் போலியாகப் பயன்படுத்தவோ, தவறான சூழல்களில் சித்தரிக்கவோ யாருக்கும் எந்த உரிமையும் கிடையாது. அந்த வகையில், ஸ்ருதி ஹாசன் மேற்கொண்டுள்ள இந்தச் சட்ட நடவடிக்கை மிகவும் அவசியமான, சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவாகும். தனது சுயமரியாதைக்காகவும் உரிமைகளுக்காகவும் அவர் குரல் கொடுத்துள்ளதன் மூலம், கலைத் துறையில் ‘தனிநபர் சம்மதம்’ (Consent), பொறுப்புடைமை மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு குறித்த முக்கியமான உரையாடலைத் தொடங்கி வைத்துள்ளார்.

